கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்ற ஜி7 உச்சிமாநாடானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடிய பிரதமருக்கு எதிராக கருத்து வெளியிட்டு அங்கத்துவ நாடுகளால் இணைந்து வெளியிட்ட அறிக்கையை கைவிட்டதையடுத்து குழப்பநிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நிறைவுபெற்றது.
கனேடிய பிரதமரின் செயற்பாடுகள் தைரியக் குறைவுடையனவாகவும் சாதுவானதாகவும் உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேற்படி உச்சிமாநாட்டில் வர்த்தகங்கள் தொடர்பில் அங்கத்துவ நாடுகளிடையே பெரும் முரண்பாடு நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் தொடர்பான அமெரிக்காவின் சுங்கவரிகள் குறித்து அந்த உச்சிமாநாட்டில் அங்கத்துவ நாடுகளிடையே கடும் அபிப்பிராயபேதம் காணப்பட்டது.
அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டுள்ள மேற்படி சுங்கவரி விதிப்புகளுக்கு பதிலடி நடவடிக்கையை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முன்னெடுக்கப் போவதாக கனேடிய பிரதமர் சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் சிங்கப்பூரில் நடைபெறும் வட கொரிய தலைவருடனான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் புறப்படுகையில் டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில், கனேடிய பிரதமர் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாகவும் உண்மையில் கனடாவே அமெரிக்க விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் கம்பனிகள் மீது பாரிய சுங்க வரியை விதித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய பிரதமர் மிகவும் நேர்மையற்ற பலவீனமான ஒருவர் எனத் தான் கருதுவதாக அவர் கூறினார்.
டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகம் தொடர்பான சர்ச்சை நிலவிய நிலையிலும் ஜி7 அங்கத்துவ நாடுகளால் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையை அங்கீகரித்து ஆரம்பத்தில் கைச்சாத்திட்டிருந்தார். எனினும் பின்னர் அவர் தனது அங்கீகாரத்தை வாபஸ் பெற்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!