அதிகார வெறியோடு பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்!

சுயநல அரசியல் சிந்தனையுடனும், அதிகார வெறியோடும், பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிடுவதை ஜனாதிபதியும் பிரதமரும் உடன் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடு ஆபத்தான கட்டத்தில் இருக்கின்ற தற்போதைய சூழலில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக மீளக் கூட்டுவதே அரசாங்கத்துக்கு உள்ள ஒரே வழி என்றும் கூறியுள்ள இரா சம்பந்தன், நாட்டின் தலைவர்கள் என்ற ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், இதைக் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இப்போதைய நிலைமையில் பொதுத்தேர்தல் அவசியமில்லை என்றும், கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே அனைவரினதும் பொறுப்பு எனவும், இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக ஓரணியில் நின்று செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்றத்தை மீளக் கூட்டினால் அரசாங்கத்துக்கு தம்மாலான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!