யாழ்ப்பாணத்தில் தொற்றுக்குள்ளாகிய 9 பேர் வீடு திரும்பினர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய ஒன்பது பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்று யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 17 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்கள் உடனடியாக வெலிக்கந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சிகிச்சைகளை அடுத்து, குணமடைந்த 9 பேர் இதுவரை வீடுகளுக்குத் திரும்பியிருப்பதாக, யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஏனைய 8 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், அவர்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவார்கள் என்றும அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவிய இடங்களில் இருந்து, கொண்டு செல்லப்பட்டு பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேர், தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இவர்களுடன் தங்க வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!