தனது உயிரையும் பொருட்படுத்தாது மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு அந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட , தன்னுடன் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை அழைத்துச்சென்ற, 2009 மே மாதம் முடிவடைந்த யுத்தத்தின் திருப்புமுனையை ஏற்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலானா தற்போது கைவிடப்பட்டதாக உணர்கின்றார்.
அவரது இந்த உணர்விற்கு காரணம் அவர் அங்கீகாரத்தை தேடுவதல்ல, மாறாக நாட்டில் பலவேறு வழிகளில் முஸ்லிம் சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு வருவதே அவரது இந்த மனோநிலைக்கு காரணமாக உள்ளது.
முஸ்லிம் மக்கள் தங்கள் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களின் மத்தியிலும்; அரசாங்கம் கொரோனா வைரசினால் உயிரிழந் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வது முஸ்லீம் சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுவரும் சமீபத்தைய சம்பவமாக காணப்படுகின்றது.
நாங்கள் இந்த தேசத்திற்கு பலவிடயங்களை செய்துள்ளோம், இந்நிலையில் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள்துருவமயப்படுத்தப்படுவதையும்,களங்கப்படுத்தப்படுவதையும் பார்க்கும்போது கவலையேற்படுகின்றது என தெரிவிக்கின்றார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினர் இவ்வாறான நிலைக்குள்ளாக்கப்படுகின்றனர் என தெரிவிக்கும் அவர் அரசியல் ஆதாயத்திற்காகவும் மேலாதிக்கத்திற்காகவும் இது இடம்பெறுகின்றது என்கின்றார்.
இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பதினொருவருடங்களாவதை நாடு நினைவுகூர்ந்துகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் அலிஸாஹிர் மௌலானா விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தலைவர் கருணாவை முதலில் சந்தித்த அனுபவம் குறித்தும்,அவர்கள் மத்தியிலதான நெருக்கம் எப்படி விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து அவர் விலகுவதற்கு காரணமாக அமைந்தது என்பது குறித்தும்,எப்படி அதிஸ்டவசமான நாள் ஒன்றில் அவர்கள் கொழும்பிற்கு தப்பிச்சென்றார்கள் என்பதையும் பினான்சியல் டைம்சிற்கு தெரிவித்தார்.
1990 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது உயர்கல்வியமைச்சராக பதவி வகித்த ஏசிஎஸ் ஹமீட் விடுதலைப்புலிகளுடன் சமாதானப்பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தவேளை தான் கருணாவை முதன் முதலில் சந்தித்ததாக மௌலானா தெரிவித்தார்.
கருணாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அருகருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏறாவூரை சேர்ந்தவர் கருணா கிரானை சேர்ந்தவர், இருவரும் நெருக்கமான உறவினை ஏற்படுத்திக்கொண்டனர் எனினும் சமாதான பேச்சுவார்த்தைகள் சிறிது காலமே நீடித்தன- 1990 நடுப்பகுதியில் மீண்டும் யுத்தம் மூண்டது.
அதன் பின்னர் பலவருட மோதல்கள் நீடித்தன, கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் சமூகம் விடுதலைப்புலிகளின் சீற்றத்தினை எதிர்கொண்டது,காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர் ( 1990 ஆகஸ்ட்) அதன் பின்னர் 1991 இ;ல் ஏறாவூரில் 120 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1994 இல் ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டிற்கு நம்பிக்கை ஏற்பட்டது எனினும் அந்த நம்பிக்கைகள்,2002 இல் நோர்வேயின் முயற்சியால் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரை நீடிக்கவில்லை.
டிசம்பர் 2001 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கியதேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றிய இரண்டு நாட்களின் மாதங்களின் பின்னர் அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2002 செப்டம்பரில் ஆரம்பமாகின.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் பேச்சுவார்த்தைகளிற்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் குழுவில் கருணாவும் காணப்பட்டார்.
இதனை தொடர்ந்து அலிஸாஹிர் மௌலானாவிற்கும் கருணாவிற்கும் இடையிலான தொடர்பாடல்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாங்கள் இருவரும் தொடர்பிலிருந்தோம்,கருணா என்னை அழைத்து,பேச வருமாறு கோருவார் என அலிஸாஹிர் மௌலானா தெரிவிக்கின்றார்.
கிழக்கு மாகாண விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் வடக்கு மாகாண உறுப்பினர்கள் என்ற பாரபட்சம் காணப்படுவதாக கருணா கருதியதால் அவர் பிரபாகரன் குறித்து அதிருப்தியடைந்திருந்தார் என்பதை நான் உணர்ந்தேன் என மௌலானா தெரிவித்தார்.
நாங்கள் ஒரு சமூகத்தினால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதன் காரணமாகவே இந்த யுத்தத்தை நாங்கள் ஆரம்பித்தோம், தற்போது இந்த குழுவிற்குள்ளேயே புறக்கணிக்கப்படுகின்றோம், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த போராளிகள் மதிக்கப்படுகின்றார்கள் இல்லை என அவர் தெரிவிப்பார்.
இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்த அதேவேளை பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்தன.
அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் இரு தலைவர்களிற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தீவிரமடைய தொடங்கின.
அரசியல் தீர்வை காண்பதற்காக கருணா அரசாங்கத்துடன் தீவிரமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டவேளை பிரபாகரன் தனது அமைப்பின் ஆயுதவலிமையை பலப்படுத்துவதற்கான மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
கருணா தனது பிள்ளைகளிற்கு ஆங்கில கல்வியை வழங்குவது குறித்து ஆர்வமாகயிருந்தார். அவர்களை கொழும்பிற்கு அழைத்து சென்று அங்கு பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான அனுமதியை என்னிடம் கோரினார் நான் இதனை செய்தேன் என மௌலானா தெரிவித்தார்.
இதன் பின்னர் அவருக்கு என்மீது அதிக நம்பிக்கையுள்ளது என்பதை நான் உணர்ந்தேன்,நான் இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவித்தேன், கருணா பிரபாகரன் மீது நம்பிக்கையை இழக்கின்றார் என்பதை தெரிவித்தேன் எனவும் மௌலானா தெரிவித்தார்.
மட்டக்களப்பிற்கும் பொலனறுவைக்கும் இடையிலான புகையிரத பாதையை விடுதலைப்புலிகள் முழுமையாக அகற்றியுள்ளதால் அந்த பாதையை மீண்டும் அமைத்தால் மக்களிற்கு ஆளுதலாகயிருக்கும் என நான் அவ்வேளை பிரதமருக்கு தெரிவி;த்தேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அந்த தண்டவாள வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பொறியியலாளர் ஒருவர் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொந்தரவு செய்கின்றனர் பணம் கேட்கின்றனர் என என்னிடம் தெரிவித்தார்.
நான் இதனை கருணாவிடம் தெரிவித்தவேளை திட்டத்தின் பத்து வீத பணத்தை பெற்றுக்கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் வடபகுதி உறுப்பினர்கள் கிழக்கிற்கு வந்து மக்களை துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர்,என தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இரு தலைவர்களிற்கும் இடையில் முறுகல் தீவிரமடைந்து வந்த அதேவேளை அரசியல் அரங்கிலும் அதிர்ச்சிகரமான விடயங்கள் இடம்பெற்றன.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தைகலைத்ததுடன் ஏப்பிரல் மாதம் தேர்தல் இடம்பெறும் என அறிவித்தார். அந்த தேர்தலின் மூலம் மகிந்த ராஜபக்ச பிரதமரானார் எனினும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தது.
எனினும் யுத்தநிறுத்தத்தினால் பிரபாகரன் ஆயுதமேந்திய போராளிகளை கிழக்கு கடற்கரைக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.கருணா நோர்வேயின் அனுசரணையாளர்களின் நம்பிக்கையை இழந்ததன் காரணமாகவும், ( அவர்கள் பிரபாகரனின் பக்கம் என அவர் கருதினார்) கருணா மௌலானாவை அணுகி தன்னை கொழும்பிற்கு அழைத்து செல்லும்படி கோரினார்.
ஏப்பிரல் 12 ,2004 இல், யுத்த நிறுத்த உடன்படிக்கை காரணமாக உருவாக்கப்பட்டிருந்த சமாதான செயலகத்தின் ஒரு சிலரிற்கு மட்டுமே தெரிந்திருந்த நிலையில் மௌலானா கருணாவுடன் கொழும்பை நோக்கி தனது வாகனத்தில் பயணித்தார்.
கருணா தன்னை வேறு எவரும் கொழும்பிற்கு கொண்டு செல்வார்கள் என அவர் நம்பாததே அதற்கு காரணம்.
யுத்தம் முடிவடைந்து 11 வருடங்களாவதை நாடு நினைவுகூர்ந்துகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கிட்டத்தட்ட மிகப்பெரிய தியாகத்தை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டவர் என்ற அடிப்படையில் நாடு எவ்வாறு முன்னோக்கி நகராமல் பின்னோக்கி சென்றுள்ளது என்பதை பார்ப்பது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!