தமிழருக்கு நீதி கிடைக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்! – நவநீதம்பிள்ளை

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைப்பதற்கு, அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று, முன்னாள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில், ஆறு தசாப்த காலத்தில் 146, 000 தமிழர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நினைவு தினத்தில் மரணமான தமிழர்களை நாம் கௌரவிக்கும் அதேவேளை, அவர்களின் நீதிக்கும், சுதந்திரத்துக்கும், இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்குமான போராட்டத்துக்கு நாம் துணைநிற்போம்.

இலங்கையில் நடைபெற்ற இந்தப் போரின் போது போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை ஐ.நா. முன்னெடுத்த விசாரணைகள் உறுதிப்படுத்தியிருந்தது.

ஆனால், இது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இதுவரையில் நீதிப்பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவும் இல்லை, இதில் சம்பந்தப்பட்ட யாரும் இதுவரையில் நீதியின் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தப்படவும் இல்லை.

ஆனால், ஒரு சிறுவன் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்தமைக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவரை அண்மையில் இலங்கை அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்தது.

கடந்த மாதத்தில்தான் இவர் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டார். இது நீதிக்கு எதிரான ஒரு குற்றம். இலங்கையில் தமிழர்கள் ஒடுக்குமுறைகளால், மனித உரிமை மீறல்களால் தொடர்ந்தும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் இதுவரையில் அவர்களிடம் மீளக் கொடுக்கப்படவில்லை. தேசிய கீதத்தை தமிழில் பாடமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

200 பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் உள்ளனர். தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ந்தும் அடக்கப்படுவதால்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுக்கான நீதியையும், இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுப்பதற்குமாக நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!