லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!

லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. வெளியான புதிய தரவுகள் அடிப்படையில் லண்டனில் 17 சதவீத மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இது மொத்த சனத்தொகையில் 1.53 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மொத்த இங்கிலாந்தில் இந்த எண்ணிக்கை 5 சதவீதம் எனவும், சுமார் 2.85 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர் என அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

லண்டனில் 17 சதவீதம் பேர் கொரோனாவுக்கு இலக்காகியிருந்தும், இறப்பு வீதம் மிகவும் குறைவு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லண்டனை பொறுத்தமட்டில், இங்குள்ள மக்கள் சராசரியாக இளைஞர்கள் எனவும், கொரோனா வயதானவர்களுக்கே ஆபத்தானது என நிபுணர் ஒருவர் குறித்த ஆய்வறிக்கை தொடர்பில் தெரிவித்துள்ளார்.

தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்திலிருந்து வெளியான தனி தரவுகளின் அடிப்படையில், மக்கள் தொகையில் 0.25 சதவீதம் பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வாரத்திற்கு 61,000 பேர் – ஒவ்வொரு நாளும் சராசரியாக 8,700 பேர் இன்னமும் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி வருவதாகவும் இது காட்டுகிறது.

மேலும் இந்த ஆய்வுகளின்படி கொரோனாவுக்கு இலக்காகும் 12 பேரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கடந்த 24 மணி நேரத்தில் 697 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனில், இது அந்த 8,700 எண்ணிக்கையில் 8 சதவீதம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!