சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த இதொகா பிரமுகர்!

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் கட்சியில் உள்ள ஒருவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கவை தொலைபேசியில் மிரட்டியதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஆறுமுகன் தொண்டமானின் தரப்பினர் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் புறக்கணித்துள்ளனர் அமைச்சரின் மறைவிற்கு பின்னர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளிற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் காரணமாக நாட்டில் இரண்டாவது சுற்று கொரோனா ஆபத்து ஏற்படலாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறுதிசடங்குகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்ததால் சட்டநடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு தரப்பினரும் பாரியசேவையை ஆற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் பல குடும்பங்களால் தங்கள் குடும்ப உறுப்பினர்களிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாத நிலையேற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிசடங்குகளை 24 மணிநேரத்திற்குள் மிகக்குறைந்தளவானவர்களுடன் நடத்தவேண்டும் என்ற விதிமுறை காரணமாக இவ்வாறான நிலை நாட்டில் காணப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அமரர் ஆறுமுகனின் உடல் நாட்டின் ஐந்து இடங்களிற்கு எடுத்துச்செல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதன் மூலம் பிழையான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில்ஜசிங்க மிரட்டப்பட்டமை குறித்தும் அவர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!