1000 ரூபா சம்பளத்தை இல்லாமல் ஆக்கியது நாங்களே? – முன்னால் அமைச்சர் வே. இராதாகிருஸ்னன்.

” ஐக்கிய தேசியக் கட்சியானது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்கும் என்பது பகல் கனவாகும். தாம் சார்ந்த தொழிற்சங்க உறுப்பினர்களின் பிரச்சினைகளையே உரிய வகையில் பேசமுடியாதவர்கள் , எவ்வாறு மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுப்பார்கள்.

ஆரம்ப காலம் முதல் ஆயிரம் ரூபா சம்பளத்துக்கும் அரசாங்கத்தின் கொடுப்பனவு ஐம்பது ரூபாயையும் இல்லாமல் ஆக்கியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் அமைச்சர்களே. இவர்களை வருகின்ற பொது தேர்தலில் ஓரம் கட்ட வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பு இன்று நுவரெலியாவில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர் ,

” ஐக்கிய தேசிய கட்சியின் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அமளிதுமளி ஏற்பட்டு தொழிலாளர் பிரதிநிதிகள், சிறிகொத்தவில் இருந்து வெளியேறிய சம்பவம் யாவரும் அறிந்த விடயம். இவர்களுக்கே இப்படி என்றால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் அதேநிலைதான்.

பொதுவாக ஐ.தே.க தொழிலாளர்சார் கட்சியல்ல. முதலாளிமார்சார் கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். இவர்கள் முடிந்தளவு முதலாளிமார்களின் நலன் குறித்தே செயற்படுவர்.

மலையக பெருந்தோட்டங்களை எடுத்துக் கொண்டால் 95 வீதமான தோட்டங்கள் தனியார் முதலாளிமார்களுக்கே சொந்தமானது. இந் நிலையில் இவர்கள் எப்படி பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வருவார்கள்? பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்தையின்போது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தவர் ஐ.தே.கட்சியின் அமைச்சர் நவீன் திசாநாயக்க இவரே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக இருந்தவர். இவர் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிடுகின்றார். இவருக்கு பெருந்தோட்ட மக்கள் நல்ல பாடம் ஒன்றினை கற்பிப்பர் என நினைக்கின்றேன்.” – என்றார்.

இதனை கேட்ட மக்கள் அதே கட்ட்சியில் அப்போதைய அமைச்சராக இவர்தானே இருந்தார் ஏன் அதை அன்றே கூறவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!