‘சிறிகொத்தவை எங்களுடையது அதை கைப்பற்றுவோம்’ – சஜித் சபதம்!

பொதுத்தேர்தல் வெற்றியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவையும் கைப்பற்றுவோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இத்தருணத்தில் உறுதிமொழியொன்றை வழங்குகின்றோம். அதாவது பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றதும், மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பின் பிரகாரம் சிறிகொத்தவின் பொறுப்பையும் ஏற்போம்.

உண்மை ஒருபோதும் தோற்காது. எமது வேட்புமனு தொடர்பில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு இதனை உறுதிப்படுத்துகின்றது. எதிர்வரும் நாட்களிலும் சில சம்பவங்கள் இடம்பெறலாம். சவால்களையெல்லாம் தாண்டி வெற்றிகரமாக தேர்தலை எதிர்கொள்வோம். எமது கட்சியில் ‘டீல்’ அரசியலுக்கு இடமில்லை. ” – என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அதேவேளை, சூழ்ச்சிமூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணத்தை எவராலும் தடுக்கமுடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!