புத்தர் சிலை கூடு சேதமாக்கலினால் குழப்பமடைய வேண்டாம்! – விமல தேரர்

இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை புத்தர் சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய வேண்டியதில்லை. தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்று யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டமை தொடர்பிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

‘யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதனை குழப்புவதற்காக சிலரால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். இந்த விடயம் குறித்து தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ குழப்பமடைய வேண்டாம். தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.

இந்த விடயத்தினை பெரிதாக்கி எமது இன ஒற்றுமையை குலைக்காது. அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.’ – என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!