முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவது தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி நிராகரித்திருப்பது குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடுமையான அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதியின் இச்செயற்பாடானது மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட அதற்கு எதிரான செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது , புலிகள் இறந்து விட்டார்கள் என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் அவ் அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்தவர்களுக்கு வாழ்வாதாரங்களைக் கொடுக்காமல் விடுவது மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட எதிரான ஒரு செயற்பாடாகும்.
அமைச்சர் சுவாமிநாதன் கொண்டு வந்த அமைச்சரவைப் பத்திரமானது மிகச் சரியானதாகும். அதற்கேற்றவாறு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்காமையானது மிகவும் பிழையான ஒரு நடவடிக்கையாகும். இதேபோன்று தான் நாம் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கப்போகின்றோம் என்றெல்லாம் கூறிவருகின்றார்கள்.
ஆனால் உண்மையில் இராணுவத்தில் பிழைகளைச் செய்தவர்களையே காட்டிக்கொடுக்குமாறு நாம் கூறுகின்றோம். அதற்காக முழு இராணுவத்தையும் காட்டிக்கொடுப்பது என்று அர்த்தமல்ல. ஆகவே இதில் உண்மை என்பது எது பொய் என்பது எது என்ற அடிப்படைகளை அறியாமல் எம்மீது இருக்கின்ற காழ்புணர்ச்சிகளின் நிமித்தம் எமக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லிணக்கத்திற்கு ஏற்றதல்ல என்றார்.
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை மறுப்பது மனிதஉரிமை மீறல்! – முதலமைச்சர் காட்டம்