விடுதலைப் புலிகள் தொடர்பாக சுவிஸ் நீதிமன்றத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக தெரிவித்து குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிஸர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் நேற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.

இதன்படி, குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்பு வழங்கியது.

ஏனைய மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காக தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.

அரச தரப்பு சட்டத்தரணி நோத்தோ இலங்கையிலும், சுவிஸிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகளை நீதிமன்றம் நிராகரித்தது. சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம், இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!