நயினாதீவு ஆலய விவகாரம் – விசாரணைக்கு பிரதமர் உத்தரவு!

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால், கேடு விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணை நடத்துமாறு, பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் .

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா நேற்று நடைபெற்ற போது, கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆலயத்துக்குள், பாதணிகளுடன் நுழைந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, படையினர் மற்றும் பொலிசார் ஆலயத்துக்குள் நடந்து கொண்ட முறை குறித்து முறைப்பாடு செய்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வடபிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரை இன்று காலை தொடர்பு கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்றும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அவர் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து, நயினாதீவுப் பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சம்பந்தப்பட்ட கடற்படையினரை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து, விசாரணை நடத்தியிருப்பதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!