பிறந்த நாள் கொண்டாடி சர்ச்சையில் சிக்கினார் இராணுவத் தளபதி!

இராணுவத் தலைமையகத்தில் முதன்மை தலைமை அதிகாரிகளின் ஏற்பாட்டில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தனது 56 ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த நிகழ்வில், இராணுவத் தலைமையகத்தின் உயர்மட்ட தளபதிகளான, மேஜர் ஜெனரல்கள் பங்குபற்றியிருந்தனர். எனினும், அவர்கள் கொரோனா தொற்று தொடர்பான சுகாதார வழிகாட்டு முறைகளைப் பின்பற்றவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இராணுவத் தளபதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, உயர்மட்ட படைத் தளபதிகள் முக கவசங்களை அணியவில்லை என்பதுடன், சமூக இடைவெளியையும் பேணவில்லை.

கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான ஜனாதிபதி செயலணியின் தலைவராக இருக்கும் இராணுவத் தளபதியே , அதனைத் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டு முறைகளை பின்பற்றாமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!