தமிழகத்தில் சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவத்தில், ரத்தம் சொட்ட சொட்ட பொலிசார் அடித்ததாக மனைவி புகார் அளித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருக்கு பென்னிக்ஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் காமராஜர் சிலை அருகில் செல்போன் கடை வைத்துள்ளனர். கடந்த 19-ஆம் திகதி, கடையை கூடுதல் நேரமாக திறந்து வைத்திருந்தது கூறி பொலிசாரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, சாத்தான்குளம் எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் 2 பேரும் அங்கு வந்து, கடையை ஏன் இவ்வளவு நேரம் திறந்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். ஜெயராஜ் வாக்குவாதத்தில் இறங்கியதால், பொலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஜெயராஜ்ஜை பொலிசார் தாக்கப்படுவதைக் கண்டு மகன் பதறியுள்ளார்.
இது குறித்து கேட்ட போது, பென்னிக்ஸையும் பொலிசார் தாக்கியுள்ளனர். அதன் பின், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் நேற்று முன்தினம் இரவு பென்னிக்ஸ் நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாகவும், இவரைத் தொடர்ந்து தொடர்ந்து ஜெயராஜும் மரணமடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அது எப்படி 2 பேரும் அடுத்தடுத்து இறக்க முடியும் என்று வணிகர்கள் ஒருபக்கம், பொதுமக்கள் மறுபக்கம், எதிர்கட்சிகள் இன்னொரு பக்கம் என சேர்ந்து இவர்களின் மரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயராஜ் மனைவி செல்வராணி, தன்னுடைய மகன், கணவன் மர்ம மரணம் குறித்து காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், என் கணவரையும், மகனையும் பொலிசார் ஆபாசமா திட்டினர். ரத்தம் சொட்ட சொட்ட அடித்திருக்கிறார்கள். எஸ்ஐ ரகு கணேஷ் நான் யார் தெரியுமா? கொம்பன் என மிரட்டி அடித்திருக்கிறார். என் கணவன், மகன் மரணத்துக்கு காரணமான பொலிசாரை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இப்புகார் அளித்துள்ளார்.
மேலும், சட்டையை பிடிச்சு அடித்து இழுத்து சென்றுள்ளனர். இதை என் மகன் பார்த்துவிட்டு, ஏன் என் அப்பாவை இப்படி இழுத்துட்டு செல்கிறீர்கள் என்று கேட்ட போது, நீயும் காவல்நிலையத்திற்கு வா என்று சொல்லிவிட்டு போயுள்ளனர். காவல்நிலையத்தில் என் கணவரை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆபாசமாக திட்டி கன்னத்தில் அடித்துள்ளார். இதனைப் பார்த்த என் மகன், ஏன் என் அப்பாவை அடிக்கறீங்க என்று கேட்ட போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் பால்துரையிடம் எனது மகனையும் அடிக்க சொல்லியிருக்கிறார். இதற்குபிறகுதான், எஸ்ஐ பால்துரையும், பொலிசாரும் சேர்ந்து என் மகனை மூட்டுகளில் கம்பால் அடித்தனர். பொலிசார் அடித்த அடியில் பின்பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது.
இதனைப் பார்த்த என் கணவர், என் பையனை ஏன் இப்படி போட்டு அடிக்கறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீதர் என் கணவரையும் அடிக்க சொல்லியிருக்கிறார். எனது கணவரை கம்பால் அடித்து ரத்தம் சொட்டச்சொட்ட லாக் அப்பில் நிர்வாணமாக அடைத்துள்ளனர். இரவு 11.30 மணிக்கு வந்த எஸ்ஐ ரகு கணேஷ், நான் யார் தெரியுமா? கொம்பன் என்று கூறி கெட்ட வார்த்தைகளில் திட்டி அவரும் அடித்துள்ளார். இதெல்லாம் தெரிந்து நான் காவல்நிலையத்திற்கு சென்று பார்த்தேன். அங்கே எனது கணவரும் மகனும் காயத்துடன் நின்றிருந்தனர். 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.
நீதிமன்றத்தில்போய் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டனர். ஜுன் 21-ஆம் திகதி என் கணவரையும் மகனையும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு எனது கணவர் ஜெயராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அதன் பின் நேற்று காலை எனது மகன் பென்னிக்ஸ் இறந்துவிட்டான் என செய்தி வந்தது. என் கணவரும் மகனும் சாத்தான்குளம் பொலிசார் அடித்துதான் இறந்துள்ளார்கள். காட்டுமிராண்டி தனமாக அடித்து கொலை செய்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், பால்துரை, ரகு கணேஷ், காவலர்கள் வேலுமுத்து, ஜேசுராஜ் சாமத்துரை, பாலா, தன்னார்வ தொண்டர்களான கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா மேலும் தொடர்புடைய நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை விசாரணை செய்து நீதி, நிவாரணம் பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று செல்வராணி புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், பென்னிக்ஸை பொலிசார் தாக்கியபோது, அவரது ஆசன வாய் வழியே லத்தியால் குத்தி கொடுமைப்படுத்தியதில் காயம் ஏற்பட்டு ரத்த கசிவும் ஏற்பட்டதாம். தன்னால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என்று அங்கிருந்தோரிடம் பென்னிக்ஸ் அழுததாக தகவல் வெளியானதால், இதை பச்சை படுகொலை என்றே பொதுமக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!