ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது 3 வழக்குகள்!

நெல்லியடி, மாலி சந்தியில் நேற்று மாலை நடந்த தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், செய்தி கேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பொலிஸார் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

இதனை ஒளிப்படம் எடுத்த மு.மதிவாணன்என்ற ஊடகவியலாளருக்கு எதிராகவே, தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று குற்றச்சாட்டி பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஊடகவியலாளர் மு.மதிவாணன், ‘மாலுசந்தி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டத்துக்கு செய்தி சேகரிப்பதற்கான சென்றிருந்தேன்.

அங்கு வழமைக்கு மாறாக அதிகளவு சோதனைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். என்னையும் வழிமறித்து சோதனை செய்தனர். எனது உடமைகளையும் பொலிஸார் சோதனை செய்தனர். பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளை நான் ஒளிப்படம் எடுத்திருந்தேன்.

இதன்போது என்னுடன் முரண்பட்டுக் கொண்ட பொலிசார், தமது கடமைகளுக்கு நான் இடையூறு விளைவித்தேன் என்பது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதற்காக, எதிர்வரும் 30ம் திகதி நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது பொலிஸார் கையுறைகளை அணியாத வாறே என்னையும், எனது உடமை மற்றும் பொது மக்களையும் சோதனை செய்தனர்’ என்றும், குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!