காவல் துறையின் கோர முகம்: விசாரணை என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொல்லப்பட்ட அவலம்!

தென்காசியில் பொலிசார் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் குமரேசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தென்காசியின் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் குமரேசன் மீது செந்தில் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மே மாதம் 8, 10 ஆகிய தேதிகளில் விசாரணைக்குச் சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் கடுமையாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. வெளியில் சொன்னால் குமரேசனின் தந்தையையும் அடிப்போம் என மிரட்டியதால் குமரேசன் யாரிடமும் சொல்லவில்லை.

இந்நிலையில் கடந்த 10ம் திகதி குமரேசன் ரத்தம் கக்கியதால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 12ம் திகதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொலிசார் தன்னை சித்ரவதை செய்ததாக கதிரேசன் மருத்துவரிடம் கூறியுள்ளார், இதனால் அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பலத்த காயமடைந்ததாக கதிரேசனின் தந்தையிடம் மருத்துவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தன் மகனை துன்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குமரேசனின் தந்தை புகார் கொடுத்தார். இதனிடையே 16 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். இதனையடுத்து உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கடைகளும் மூடப்பட்டன.

தொடர்ந்து குமரேசனின் சந்தேக மரணத்திற்கு காரணமானவர்கள் எனக் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், காவலர் குமார் ஆகியோர் மீது வீரகேரளம்புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட குமரேசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!