விசாரணை செய்ய வேண்டியோரை விசாரணை செய்யவில்லை – மஹிந்தானந்த

கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியவர்கள் எவரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவில்லை என்று மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தனது குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை விசேட பொலிஸ் குழு நிறுத்தியுள்ளமை தொடர்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும்,

“எனது குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பிரிவினர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். இதன்போது என்னிடம் இருந்த தகவல்களை கொடுத்தேன். குறித்த சம்பவத்துடன் கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பில்லை என நான் தௌிவாக கூறினேன். பொலிஸ் பிரிவினர் எந்த அடிப்படையில் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவை அழைத்தார்கள் என தெரியவில்லை.

சம்பவம் தொடர்பில் உரிய தகவல்கள் இல்லாத காரணத்தால் விசாரணைகளை நிறுத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். என்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் பிரிவிற்கு நான் கதைத்தேன். இந்த சட்டத்தின் கீழ் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என பொலிஸ் விசாரணை பிரிவின் தலைவர் எனக்கு தெரிவித்தார்.

இப்போதுதான் பொலிஸாருக்கு தெரிகிறது ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் தவறானது என்று. பொலிஸார் தவறான விசாரணைகளை ஆரம்பித்து சிக்கிக் கொண்ட பின்னர், விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டது. எனவே ஆதாரங்கள் இல்லை என்று கூற முடியாது.

தற்போது தெரிவுக்குழுத் தலைவரிடம் மாத்தரமே பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போதைய கிரிக்கெட் நிர்வாக சபையில் இருந்த முன்னாள் செயலாளரிடம் வாக்குமூலம் பெற்றனரா? தலைவரிடம் பெற்றனரா? நிறைவேற்று அதிகாரியிடம் வாக்குமூலம் பெற்றனரா? அந்த தொடருடன் தொடர்புடைய எவரிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை. நான் தௌிவாக கூறியிருந்தேன். யார் யாரிடம் தகவல்களை பெறவேண்டும் என்று.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!