மனித உரிமைப் பணிகளுக்காக குருபரன் பழிவாங்கப்படுகிறார் – ஞானசீலன்

வடக்கு கிழக்குச் சமூகம் கு.குருபரன் ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப் பணிகளுக்காக அவர் பழிவாங்கப்படுகிறார் என்று யாழ் பல்கலைக்கழகம் வவுனியா வளாக முதுநிலை விரிவுரையாளர் ஜெயசீலன் ஞானசீலன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“குருபரன் எப்போதுமே ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வறியவர்களுக்காக சட்டப்பூர்வமாக போராடும் ஒரு மனித உரிமை வழக்கறிஞராக இருந்து வருகின்றார்.

இலங்கை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக செயற்பட அனுமதிக்கப்பட முடியாது என்று யாழ் பல்கலைக்கழக பேரவை 2019 கார்த்திகை 9 அன்று அவருக்கு அறிவிக்கும் வரை அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையின் தலைவராக இருந்தார்.

பேரவையானது பல்கலைக்கழக மானிய ஆணையம் எடுத்த முடிவை எந்த விதமான மீளாய்வும் இன்றி ஏற்றுக் கொண்டதாகவே தோன்றுகிறது. இதன் மூலம் இலங்கையில் சுயாதீன உயர் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பின் தன்மையை இழக்கும் நிலையை நோக்கி நகர்கிறது.

பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் உறுதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் பேரவை கவனம் எடுக்க வேண்டும். அவரது அமைதியான மனித உரிமைப் பணிகளில் இருந்து அவரை நீக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளி சக்திகளால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் நிறுவனத்திற்கு வெளியே ஆலோசனை மற்றும் சமூகத்திற்கான சேவைகளை மேற்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ பீடங்களின் கல்விசார் ஊழியர்கள் வைத்திய ஆலோசகர்களாக செயற்படுகின்றனர். மமற்ற அனைத்து துறைகளிலும் உள்ள பிற கல்விசார் ஊழியர்களும் கூட தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஆலோசகர்களாக பணியாற்றுகின்றனர்.

மேலதிக கள அனுபவம் இல்லாமல் கல்வி சேவை அல்லது கற்பித்தல் என்பது கேலிக்குரியது. மேலும் ஆசிரியர்களும் மாணவர்களும் ‘புத்தகப் பூச்சிகள்’ ஆகிவிடுவார்கள். பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் அப்படி ஆக வேண்டும் என்று நாடும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவும் பல்கலைக்கழகமும் விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது. இப்போது பல்கலைக்கழக பட்டதாரிகள் வேலையற்றவர்களாகவும் படைப்பாற்றல் மற்றும் திறனாய்வு திறன் அற்றவர்களாகவும் மாறுவது குறித்து கடும் விமர்சனங்கள் உள்ளன.

உண்மையான கள அனுபவம் என்பது நமது ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆக்கபூர்வமான ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் மாற்றுவதற்கான உறுதியான வழியாகும்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!