சம்பந்தன் இவ்வளவு சுயநலம் கொண்டவர் என்பதை அறியவில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால், இதுவரை எதையுமே பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றும், அவரை நம்பினால் எதுவுமே கிடைக்காமல் போகும் என்றும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை-மூன்றாம் கட்டை பகுதியில் நேற்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இதுவரை காலமும் சம்பந்தன் ஒன்றுமே பெற்றுக் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. மன்னிக்கலாம்.

அவர் சென்றமுறை பதவிக்கு வந்த காலம் தொடக்கம் இன்று வரையில் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக இன்னல்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.

தமிழர்களுக்கு இதோ ஒரு புதிய அரசியல் யாப்பு வருகிறது. அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விடும் என்று கூறி சிங்கள அரசாங்கத்தைக் கோபமூட்டாமல் இருங்கள், உங்கள் பிரச்சினைகளை வெளிக்காட்டாதீர்கள் என்று தமது கட்சிக்காரரையும் தமிழ் மக்களையும் கட்டுப்படுத்தி வைத்த சம்பந்தன், இப்பொழுது மௌனம் சாதிக்கின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தபோது சவால் விட வேண்டியவர் பதவி இழந்து வீட்டுக்கு வந்த பின் சவால் விடுகின்றார்.

தமிழ் மக்களின் உரிமைகளைப் புறக்கணித்தால் அரசாங்கத்திற்கு கேடு விளையும் என்கிறார். என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் சம்பந்தன். அவர் இவ்வளவு சுயநலம் கொண்டவர். பந்தாவிற்கும் படாடோபத்திற்கும் அடிமை என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

நீங்கள் தெரிவுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பலம்மிக்க எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தபோதுதான் இங்கே எமது கோவில்கள் இடிக்கப்பட்டன. விகாரைகள் அமைக்கப்பட்டன. எமது நிலங்கள் பறிக்கப்பட்டன. சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள்.

இத்தனையும் நடைபெறும்போது அவர் இங்கு நின்றல்லவா போராடி இருந்திருக்க வேண்டும்?

ஆனால், இத்தனையும் நடைபெற்றபோது அவரோ அரசாங்கம் வழங்கிய சொகுசு மாளிகையில் கொழும்பில் தூங்கிக்கொண்டிருந்தார். அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருந்தார். இம்முறை தீர்க்கமான ஒரு முடிவை எடுங்கள்.” என்றும் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!