இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு – சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றாராம் சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் வலியுறுத்தலுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், முல்லைத்தீவில் நேற்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சிறிலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்காத நிலையில், இனிமேலும் அதற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய இரா.சம்பந்தன், இரண்டொரு நாட்களுக்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியதாக கூறினார்.

அப்போது, இனிமேலும் தாமதிக்காமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், எந்த வழியிலாவது, இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் தாம் வலியுறுத்தியதாகவும், சிறிலங்கா அதிபர் அதற்கு மறுப்பு ஏதும் கூறாமல் இணக்கம் தெரிவித்தார் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!