சிறிலங்கா விமானப்படைக்கு இத்தாலிய விமானங்களைக் கொள்வனவு செய்ய முயற்சி?

இத்தாலியிடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்கு பயிற்சி மற்றும் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆய்வு செய்துள்ளார்.

அவருடன், சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதியும் இந்த சாத்திய ஆய்வுக்காக இத்தாலி சென்றிருந்தார்.

மிலன் நகரில் உள்ள இத்தாலிய அரசுத்துறை நிறுவனமான, லியோனாடோ விமான பிரிவுக்குச் சென்ற இவர்கள், பயிற்சி மற்றும் போக்குவரத்துக்குத் தேவையான விமானங்களைக் கொள்வனவு செய்வது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இத்தாலிய விமான நிறுவன அதிகாரிகள் இவர்களுக்கு தமது தயாரிப்புகள் தொடர்பாக விளக்கங்களை அளித்ததுடன், செயற்பாட்டு ரீதியாகவும், விளக்கமளித்தனர்.

இத்தாலிய விமான நிறுவனம் விடுத்த அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!