வடக்கு, கிழக்கின் நிலைமை படுமோசம்- இராணுவமே ஆட்சி!

வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகம் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் இராணுவமே செய்கின்றது. இந்தநிலையில், அங்கு நீதியான தேர்தல் நடைபெறுவது சந்தேகமே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது

“நாடெங்கும் சிவில் நிர்வாக நடவடிக்கைளில் இராணுவத்தின் பங்களிப்பும் தலையீடும் இருக்கின்றன. ஆனால், வடக்கு, கிழக்கின் நிலைமை படுமோசமாகவுள்ளது. அங்கு சிவில் நிர்வாகம் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் இராணுவமே செய்கின்றது.

அதுமட்டுமன்றி அங்கு பாதுகாப்பு என்ற போர்வையில் வீதிகள் எங்கும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் பிரசன்னம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில் வடக்கு, கிழக்கில் நீதியான தேர்தல் நடைபெறுவது சந்தேகமே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது.

நாட்டின் ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார். அவரின் உத்தரவுக்கமையவே முப்படையினர் செயற்படுகின்றனர்.

தற்போது நாடு இராணுவ ஆட்சியில் சிக்கித் தவிக்கின்றது என்பது கண்கூடு. எனவே, பொதுத்தேர்தலில் நாட்டு மக்கள் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!