10 மனித உரிமை அமைப்புகள் இலங்கைக்கு அழுத்தம்!

சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்தி, கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, 10 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம் உள்ளிட்ட பல அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை, பாதுகாப்பான ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணிகள் போன்றன நியமிக்கப்பட்டுள்ளமை, ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளமை என்பன, நாட்டை இராணுவ மயப்படுத்துவதை நோக்கிய ஆபத்தான போக்காகும்.

ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசாங்கத்திலுள்ள பலர், உள்நாட்டு போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.

சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், மாற்றுக் கருத்துடையவர்கள், ஆகியோர், பொலிசார், புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச ஊடகங்களினால் இலக்கு வைக்கப்படுகின்றனர்.தற்போது அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை மதிக்குமாறும், பாதுகாக்குமாறும், இலங்கை அரசாங்கத்திடம், ஐக்கிய நாடுகள் சபையும், இலங்கைக்கு நிதி வழங்கும் சமூகமும் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!