மனைவியை வெட்டிப் படுகாயப்படுத்திய கணவன்!

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்று, சித்திரவதை செய்து கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார் அவரது கணவன்.

யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரெழுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 34 வயதுடைய குடும்பப் பெண், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் குப்பிளான் பகுதியில் வீடொன்றில் முதியவரை பராமரிக்கும் வேலையில் வாழ்வாதாரத்துக்காக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பணி புரியும் வீட்டின் முதியவர் சுன்னாகம் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அந்தப் பெண் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அதன்போது அங்கு சென்ற கணவர், மனைவியின் தலைமுடியை வெட்டி வீசி அவரின் முகத்தில் கத்தியால் கீறி சித்திரவதை செய்துள்ளார். அத்தோடு கத்தியால் வெட்டியும் உள்ளார்.

சம்பவத்தில் குடும்பப் பெண் அதிகளவு குருதி வெளியேறி அவதிப்பட்ட நிலையில் அயலவர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், அந்தப் பெண்ணை வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் அவரது கணவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!