இலங்கை தாதாவுக்கு உதவிய தமிழ்ப்பெண்: வெளியான அதிர்ச்சி பின்னணி!

தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கட லொக்காவுக்கு உதவிய பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவரின் தந்தையும் பல்வேறு வகையில் உதவியது தெரியவந்துள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தாதா அங்கட லொக்கா துபாயில் இருந்து போலியான பாஸ்போர்ட் மூலம் ஆள்மாறாட்டம் செய்து இந்தியாவிற்குள் புகுந்துள்ளார். கோவையில் காதலி அமானி தான்ஜியுடன் தங்கி இருந்த அங்கட லொக்காவை கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி விஷம் வைத்து கொலை செய்து, மாரடைப்பில் மரணமடைந்ததாக போலியான ஆவணங்களை கொடுத்து சடலத்தை பெற்றுச்சென்று மதுரை கூடல் நகர் அருகே தகனம் செய்ததாக கூறப்படுகின்றது.

அங்கட லொக்கா மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி பொலிசார் அவரின் சடலத்தை ஏமாற்றி வாங்கிச்சென்ற மதுரை வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் பின்னணி குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. சிவகாமி சுந்தரியின் தந்தை தினகரன் பல ஆண்டுகளாக கூடல்நகர் இலங்கை தமிழர்கள் முகாமில் தேனீர் கடை நடத்தி வந்தவர். ஆனால் கடந்த சில இரு வருடங்களில் பாலசிங்கபுரம், ரயிலார் நகர் என வீடு மாறிச்சென்றவர், கடந்த 6 மாதங்களுக்கு ஒரு முறை 3 வீடுகள் மாறியது தெரியவந்துள்ளது.

இதனிடையே, தான் தங்கியிருந்த வீட்டின் அருகிலேயே 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தான் அங்கொடா லொக்காவை, சிவகாமி சுந்தரி தங்கவைத்தது தெரியவந்துள்ளது. வீட்டு உரிமையாளரிடம் சிலிண்டர் வாங்க வேண்டும் என ஏமாற்றி குடும்ப அட்டையை பெற்று அதனை பயன்படுத்தி அங்கட லொக்காவுக்கு மதுரையை சேர்ந்த பிரதீப் சிங் என்ற பெயரில் என போலி ஆதார் அட்டையை பெற்றுக் கொடுத்துள்ளார். அதன்மூலம் 3 மாதம் இலங்கை தாதா அங்கட லொக்கா மதுரைக்காரன் போல அங்கு தங்கி இருந்தார்.

சிவகாமி சுந்தரியின் தந்தை தினகரன் மற்றும் தாய் பாண்டியம்மாளிடமும் சிபிசிஐடி பொலிசார் விசாரணை நடத்தியதில், துபாயில் இருந்து வந்த பிரமுகர் மூலம் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரிக்கு அங்கொடா லொக்கா அறிமுகமானதாகவும், அந்த துபாய் நபர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, பணத்தை பெற்றுக் கொண்டு பல்வேறு உதவிகளை செய்துகொடுத்ததாக தந்தை தினகரன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகாமி சுந்தரி அரை கிராம் தங்கம் வாங்க கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டவர் எனவும், அங்கட லொக்கா சகாக்களுடன் ஏற்பட்ட தொடர்புக்கு பின்னர் கார் வீடு சொகுசான வாழ்க்கை என தடம் மாறியதாக பக்கத்து வீட்டு பெண்கள் தெரிவித்துள்ளனர். சிவகாமி சுந்தரியின் வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலிசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே உடல்கூறாய்வின் போது அங்கட லொக்காவின் சடலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மூலம் கொல்லப்பட்டது அவன் தானா என்பதை உறுதி செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!