தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசன் வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 29 தேசியப் பட்டியல் ஆசனங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த 17 தேசியப் பட்டியல் ஆசனங்களுக்குரிய நியமனங்களை உறுதிப்படுத்தி அந்தக் கட்சி பட்டியல் ஒன்றை சமர்ப்பித்திருந்தது. மேலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பிலும் தலா 1 தேசியப் பட்டியல் உறுப்பினருக்கான நியமனங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, 19 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சார்பில் செல்வராஜா கஜேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல், அவசர அவசரமாக முடிவெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

அத்துடன், தேசியப் பட்டியல் ஆசனம் மாவை சேனாதராசாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பான முடிவை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதை இடைநிறுத்தி வைக்குமாறுகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் அரசுக் கட்சியின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், நேற்று தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானியில் தவராசா கலையரசன் தேசியப் பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!