மரணதண்டனைக் குற்றவாளிக்கும் நாடாளுமன்றம் செல்ல அனுமதி!

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள மரணதண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகரவிற்கும் நாளை ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) நாடாளுமன்றில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எல்.பிரேமலால் ஜயசேகரவுக்கும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருப்பதாக நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருப்பதாகவும் இதுகுறித்து படைக்கல சேவிதர் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட எச்.எல்.பிரேமலால் ஜயசேகர ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 37 வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!