விக்னேஸ்வரனின் முதல் நாடளுமன்ற உரையில் சர்ச்சைக்குள்ளாகிய விடயங்கள்,கருத்தை நீக்க கோரும் உறுப்பினர்கள்

இலங்கை தமிழர் பூமி எனவும் இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் எனவும், தமிழ் மொழி இந்த நாட்டில் பிரதான மொழி எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் சபையில் முன்வைத்த கருத்துக்கள் தவறானது. அவரது நிலைப்பாட்டை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் பதிய முடியாது. எனவே விக்கினேஸ்வரனின் கருத்தை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார சபையில் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்ற காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது.

இதன்போது ஆரம்பத்தில் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக்கொண்டிருந்த நிலையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி அவர் இதனைக் கூறினார். அவர் இதன்போது மேலும் தெரிவித்ததானது,

நாடாளுமன்றத்தில் நாம் சத்தியபிரமாணம் செய்துகொள்ளும் போது இந்த நாட்டில் இன்னொரு இராச்சியத்தை உருவாக்குவதோ அல்லது அதற்கு துணை போவதோ, நிதி மூலமாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவ மாட்டோம் என வாக்குறுதியளித்தோம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாட்டிற்கு சகலரும் ஒன்றிணைய நினைக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் நேற்றைய தினம் சபையில் முன்வைத்த கருத்துக்கள் மிகவும் மோசமானது, தமிழ் மொழி இந்த நாட்டில் பிரதான மொழி எனவும், இந்த நாட்டின் பூர்வீக குடிகளின் மொழி எனவும் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இந்த கருத்துக்கள் நாடாளுமன்ற ஹன்சார்ட் பதிவிற்கு சென்றுள்ளது. இது தவறான கருத்தாகும்.

இந்த பூமி யாருடையது, யார் பூர்வீக குடிகள் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகள் இருக்க முடியும்.

ஆனால் அந்த நிலைப்பாடுகள் இலங்கை நாடாளுமன்ற ஹன்சார்ட் பதிவிற்கு செல்ல முடியாது. எனவே விக்கினேஸ்வரனின் கருத்தை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்

இதன் போது பதில் வழங்கிய சபாநாயகர் தான் இது குறித்து ஆராய்வதாக பதில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!