தேசிய அமைப்பாளராக நானே இருப்பேன் – உறுதியுடன் கூறுகிறார் மணிவண்ணன்

எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கும் எதிரானது. எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே இருப்பேன் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இரு தினங்களில் எனக்கு கட்சி தலைவர் மற்றும் செயலாளரினால் நான் பதவி விலக்கப்பட்டுள்ளதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் நான் இந்த தேர்தலில் தோல்வியுற்றால் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் என அறிவித்திருந்தேன். இதனை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை நான் அரசியலில் இருந்து வெளியேறுவதை பலரும் விரும்பாததல், நான் தொடர்ந்து அரசியலில் பயணிப்பேன்.

எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்துள்ளேன் எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் இயற்கை நீதி கோட்பாட்டுக்கு எதிரானது.

மத்திய குழு கூட்டம் ஏன் ? எதற்கு ? என கூறப்படாமல் கூட்டப்பட்டது. எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. என் தரப்பு நியாங்களை கூற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை இது ஜனநாயகம் இல்லாதது அறமற்ற செயற்பாடாகும்.

அதில் பிராதான குற்றச்சாட்டு பணம் வாங்கியதாக உள்ளது. நான் எனது சொந்த தேவைக்காக பணம் பெறவில்லை. அதனை முற்றாக மறுக்கிறேன். ஏனைய விடயங்கள் தொடர்பாக பொது வெளியில் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. அது தொடர்பாக எனது பதில் கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

எனக்கு எதிராக கட்சியினால் எடுக்கப்பட்ட ஜனநாயக பண்பற்ற ஒரு தீர்மானம் என்பதாலும், இயற்கை நீதி கோட்பாட்டிற்கும் எதிரானது என்பதனாலும் நான் தொடர்ந்து தேசிய அமைப்பாளராகவும் ஊடக பேச்சாளராகவும் செயற்படுவேன். எம் இனத்திற்காக உயிர் நீத்தவர்களை மனதில் நிறுத்தி அர்ப்பணிப்புடன் எனது செயற்பாடுகள் தொடரும் என ஆணித்தரமாக கூறுகிறேன்.

இன்று தேசியம் பேசுபவர்கள் பிளவுபட்டு நின்பதனால் சிங்கள கட்சிகள் தேசியம் பேசாதவர்கள் வெற்றி பெறுகின்றார்கள். அதனால் சிறு சிறு பிரச்சனைகளுக்காக பிரிந்து செல்வதனை நான் என்றைக்கும் ஏற்கமாட்டேன்.

தேர்தல் காலத்தில் எனக்கு எதிராக கட்சியை சேர்ந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கடந்த 9ம் திகதி எனது நண்பன் சட்டத்தரணி அர்ஜூனாவுடன் சென்று சந்தித்து முறையிட்டு சில ஆதாரங்களையும் முன் வைத்தோம். அது தொடர்பில் எனக்கு இதுவரை தலைவர் எந்த பதிலையும் தரவில்லை.

எனக்கும் தலைவருக்கும் இடையிலான உறவு ஆழமானது நான் என்றும் இணைந்து செயற்படுவேன். நான் எனது கட்சியுடன் நேசக்கரத்தை நீட்டுவேன். எனது கட்சி நிறுவனமயப்படுத்தப்பட்டு மக்கள் சேவைக்காக செயற்படும். அதற்காக தொடர்ந்து செயற்படுவேன் என உறுதி அளிக்கிறேன். காலங்கள் பல பதில்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!