‘கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்’ – டிரம்ப் சூளுரை!

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக டிரம்ப் மீண்டும் தேர்வாகியுள்ளார். அதிபர் வேட்பாளர் தேர்வை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

மனைவி மெலனியாவுடன் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப், குடியரசு கட்சியின் பிரசாரத்தையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்நிலையில் அதிபர் வேட்பாளராக கட்சி சார்பில் 2வது முறை அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு மக்களிடம் டிரம்ப் உரையாற்றினார். அதில், குறைந்த நேரத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்காக அமெரிக்காவின் தலைசிறந்த விஞ்ஞானிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அவற்றை கொண்டு கொரோனாவை ஒழித்துக்கட்டலாம். அமெரிக்காவில் 3 வகையான கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அவை விரைவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்த ஆண்டுக்குள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது அமெரிக்காவில் 60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 சதவீதம் பேர், அதாவது 33 லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இதுவரை 1.85 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!