தென் கொரியாவில் விமான நிலையத்தில் திடீரென சுருண்டு விழுந்த இந்திய பெண்: பின்னர் நேர்ந்த சோகம்!

தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் 28 வயதான லீஜா ஜோஸ் என்பவரே மரணமடைந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார் லீஜா.

பெப்ரவரி மாதம் விடுமுறைக்காக கேரளா திரும்பியிருந்த அவர், கொரோனா பரவல் காரணமாக உரிய நேரத்தில் தென் கொரியா திரும்ப முடியாமல் போனது. தொடர்ந்து கடந்த 6 ஆம் திகதி தென் கொரியா திரும்பியுள்ளார். இதனையடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார். இதனிடையே காதில் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது, ஆனால் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இருப்பினும் எந்த பலனும் இல்லை என்ற நிலையில், அவர் ஊருக்கு திரும்ப முடிவு செய்து, வியாழக்கிழமை மாலை விமான நிலையம் சென்றுள்ளார். ஆனால் சில நிமிடங்களில் விமான நிலையத்தில் வைத்தே அவர் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்ததாக தெரியவந்துள்ளது. லீஜா மரணமடைந்த தகவல் உறவினர்களுக்கு தெரியவந்துள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் உதவியுடன் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!