விக்கியின் கருத்தை நீக்கக் கோரும் உரிமை யாருக்கும் இல்லை!

விக்னேஸ்வரனின் கருத்துக்களை ஹன்சாடில் இருந்து நீக்குமாறு கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது நிலைப்பாட்டுக்கு இணங்க வேண்டிய தேவையும் இல்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் மக்களின் பூர்வீகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. அதனை தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது. அதனை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்த யாருக்கும் முடியாது. சபாநாயகரும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்ற ஹன்சாட் அறிக்கையில் பதிவாகி இருக்கின்றது. அதனை அதிலிருந்து நீங்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கும் உரிமை இருக்கின்றது. அதனடிப்படையிலே சபாநாயகர் அவர் தெரிவித்த கருத்துக்களை மறுக்கவில்லை. அத்துடன் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு அனைவரும் இணங்கவேண்டும் என்றில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!