திலீபனின் நினைவேந்தல் தடையை நீடித்து கட்டளை!

தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (24) சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால் முடியாது என்றும் கட்டளையிடப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் யாழ் நீதிமன்றத்தில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து 14ம் திகதி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மறுநாள் இடம்பெற்ற மீளாய்வு விசாரணையை தொடர்ந்து தடை உத்தரவு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீளவும் தடையை நீக்குவதாக அல்லது நீடிப்பதா என்ற மீளாய்வு உத்தரவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தீர்ப்பு கட்டளையை வழங்கிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல்,

“மன்றினால் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்படுகிறது. அதனை மேலும் நீடிக்க வேண்டுமாயின் சட்டம் ஒழுங்கு அமைச்சு (உள்ளகப் பாதுகாப்பு) வர்த்தமானி மூலம் அறிவிக்க வேண்டும். எனவே இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது” என்று அறிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!