அமெரிக்காவில் மாயமான பிரபல மொடல்: மனநலம் குன்றிய நிலையில் பிரேசிலில் மீட்பு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குடியிருப்பில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்னர் மாயமான பிரபல மொடல் மனநலம் பாதித்த நிலையில் பிரேசிலிய சேரிப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். வடகிழக்கு பிரேசிலை பிறப்பிடமாக கொண்டவர் 26 வயதான Eloisa Pinto Fontes என்கிற பிரபல மொடல். பல முக்கிய நிறுவனங்கள் சார்பில் மொடலாக பணியாற்றிய இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள தமது குடியிருப்பில் இருந்து மாயமானார்.

ஆனால் அவர் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை இல்லாத நிலையில், அக்டோபர் 6 ஆம் திகதி Morro do Cantagalo என்ற பகுதியில் குழம்பிய நிலையில் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக குறித்த பகுதியில் சுற்றித் திரிந்த அவரிடம் சர்வதேச மொடலிங் நிறுவனங்களுடனான அவரது ஒப்பந்தங்களின் ஆவணங்கள் இருந்துள்ளது.

மட்டுமின்றி மொடலிங் தொடர்பான சர்வதேச புகைப்படக்கலைஞர்களின் முகவரிகளும் அவரிடம் இருந்துள்ளது. 2019-ல் ஒருமுறை இவர் மாயமான பின்னர் 5 நாட்களில் குடியிருப்புக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து ஐரோப்பிய நிறுவனங்கள் பல இவரை கைவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அவருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் குணமடைந்த பின்னரே, நியூயார்க்கில் இருந்து பிரேசில் வந்ததன் பின்னணியும், இந்த நிலைக்கு காரணமும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!