கோவிட்-19: பிரித்தானியாவில் ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி நூறுக்கும் அதிகமானோர் பலி!

பிரித்தானியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி நூறுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பிரதமர் போரிஸ் தலைமையிலான அரசு, கொரோனா பரவலை எதிர்கொள்ள மூன்றடுக்கு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,234 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

மட்டுமின்றி கடந்த நான்கு மாதங்களில் முதன்முறையாக 143 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். கடைசியாக பிரித்தானியாவில் ஒரே நாளில் 100-கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் மரணமடைந்தது ஜூன் 10 ஆம் திகதி என பதிவாகியிருந்தது. மட்டுமின்றி கொரோனா உறுதி செய்யப்பட்ட 28 நாட்களில் 111 பேர் மரணமடைந்த சம்பவமும் பிரித்தானியாவில் நடந்தேறியது.

இதனிடையே, கொரோனா பாதித்து இறந்தவர்கள் என தனியாக ஒரு 58,500 பேர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. இவர்களின் இறப்பு சான்றில், கொரோனாவால் இறந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய மூன்றடுக்கு ஊரடங்கு முறையால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றே பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுக்குள் வராது என முரணான அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!