அடுத்த இரண்டரை மாதங்களில் தொற்று அதிகரிக்க வாய்ப்பு!

குளிர்காலம், பண்டிகை காலங்கள் வருவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும், அடுத்துள்ள இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:

கொரோனா வைரசுக்கு எதிராக 3 தடுப்பு மருந்துகள் தயாராகி வருகின்றன. இதில் ஒரு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3வது கட்டத்தில் இருக்கிறது. மற்ற இரு தடுப்பு மருந்துகளும் 2-வது கட்டத்தில் இருக்கின்றன. இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விரைவில் மக்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறேன். கொரோனாவுக்கு எதிராக நாம் நடத்திவரும் போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், குளிர்காலத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலத்தில் மக்கள் நெருக்கமாகக் கூடும் வாய்ப்பு இருக்கும். அப்போதும் கொரோனா பரவல் அதிகரிக்கலாம். எனவே, கொரோனா விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதில் புதிய மைல்கல்லைத் தொடர்ந்து எட்டி வருகிறது. கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது என்ற அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!