நள்ளிரவில் கணவனை உயிரோடு எரித்து கொன்ற மனைவி: அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த மனைவி பின்னர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் சுதாகர் (40). இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி (34) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதாவது 31 வயதில் மறுமணம் செய்த லட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி திவ்யா (11) என்ற மகள் உள்ளாள். கணவரை விட்டு பிரிந்த லட்சுமி, சுதாகரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சுதாகருக்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் வாக்குவாதம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுதாகர் வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுதாகர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும், வீட்டிற்குள் லட்சுமி மயங்கிய நிலையில் கிடந்தார்.

பின்னர் அங்கு வந்த பொலிசார் லட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் நேற்று காலை லட்சுமிக்கு சுயநினைவு திரும்பியது. இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. மதுவுக்கு அடிமையான சுதாகர் போதையில் தினமும் வீட்டுக்கு வந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் சுதாகர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கணவரின் தொந்தரவை தாங்க முடியாமல் தவித்து வந்த லட்சுமி, சுதாகரின் மீது பெட்ரோலை ஊற்றினார். பிறகு ஒரு துணியில் தீயை பற்ற வைத்து அவர் மீது வீசினார்.

இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. உடல் கருகிய சுதாகர் அங்கேயே கருகி பிணமானார். மேலும், லட்சுமியும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!