அடங்க மறுக்கும் டிரம்ப்: அடுத்து செய்யவிருக்கும் செயல்!

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகளை சட்டரீதியாக எதிர்க்க டிரம்ப் தரப்பு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும்,டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். சட்டரீதியாக தேர்தல் முடிவுகளை எதிர்க்க டிரம்ப் தரப்பு திட்டமிட்டுள்ளது.

கிட்டதட்ட 10 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் திருட்டுத்தனமாக பறிக்கப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டும் டிரம்ப் பரப்புரை குழு, பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.

பென்சில்வேனியா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் கண்காணிப்பாளர்களை 6 அடி இடைவெளியில் நிற்க வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி 20 அடி தொலைவில் நிற்க வைக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் நாளுக்கு பின்னர் வந்த தபால் வாக்குகளை ஏற்பது தொடர்பாகவும் டிரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

விஸ்கான்ஸினை பொறுத்தவரை மறுவாக்கு எண்ணிக்கையை கோரவும், நெவேடாவில் மாநிலத்தை விட்டு வெளியேறியவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்தும் டிரம்ப் தரப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

தேர்தல் முடிவுகளை எதிர்க்க டிரம்ப் தரப்பு முதலில் மாநில நீதிமன்றங்களை நாட வேண்டும். பின்னர் அது மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் செல்லும். அதே வேளையில், தோல்வியை ஏற்கும்படி ட்ரம்பிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!