சுரேன் ராகவன் வடக்கு ஆளுநராக இருந்து என்ன சாதித்தார்? சிவாஜிலிங்கம் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்து என்னத்தைப் பெரிதாகச் சாதித்தார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும், தவறாக செயற்படுகிறார்கள் என அவர் தெரிவித்திருக்கிறார்.

நான் ஒன்றைக்கேட்க விரும்புகின்றேன். நீங்கள் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது மக்களே உங்களுடைய குறைபாட்டை தாருங்கள் நான் அதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கிறேன் எனக் கூறியிருந்தீர்கள்.

நான் உட்பட பலர் கொடுத்த குறைபாடுகளைக் குப்பைக் கூடையில் போட்டாரா என்பது தெரியவில்லை. இப்பொழுது அரசியல் கைதிகளை விவகாரம் குறித்து பரிசீலிப்பதற்கு 9 மாதங்கள் தேவை எனக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

சுரேன் ராகவன் அவர்கள் விரும்பினால் வடக்கில் தேர்தலில் போட்டியிடலாம் மக்கள் ஆதரவு இருந்தால் வெல்லலாம் அல்லது உங்களுடைய பூர்வீகமான இடத்தில், கொழும்பில் போட்டியிடலாம்.அது அவருடைய விருப்பம்.

எனினும் வடக்கு-கிழக்கு மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

இல்லாவிட்டால் அவரைப் பற்றி நாங்கள் இன்னும் பல விடயங்களை க் கூறவேண்டிவரும். அவருடன் நேரடியான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என மிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!