டிரம்ப்பின் புகார்களில் உண்மையில்லை: தேர்தல் அதிகாரிகள் விளக்கம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு, எண்ணிக்கையில் எந்த குளறுபடியும் இல்லை, டிரம்ப்பின் புகார்களில் உண்மையில்லை என்று அறிவித்துள்ளனர். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3-ஆம் திகதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார். இதில் வெற்றிக்கு 270 எலக்டோரல் வாக்குகள் என்ற நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று, அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.

இதையடுத்து இவர் வரும் ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தேர்தலில் 217 எலக்டோரல் வாக்குகள் பெற்று தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப், தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார்.

ஏனெனில் இந்த வாக்கு எண்ணிக்கையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், நான்தான் வெற்றி பெற்றுள்ளேன். மிகப்பெரிய மோசடியால் எனது வெற்றியை பறித்துக் கொண்டு விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் கடந்த 3-ஆம் திகதி நடந்த வாக்குப்பதிவு, உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பணிகளும் மிகவும் முறையாகவும், உரிய பாதுகாப்புடனும் நடந்தன.

வாக்குச்சீட்டுகள் ஏதும் காணாமல் போகவில்லை. வாக்குச்சீட்டுகள் எதுவும் மாற்றப்படவில்லை. மாற்றவும் முடியாது. வாக்குப்பதிவில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை.

டொனால்ட் டிரம்ப்பின் புகார்களில் எந்த உண்மையும் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழும் என்று எங்களுக்கு தெரியும்.

அவற்றை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இந்த தேர்தல் அமெரிக்காவின் மாண்பை கருத்தில் கொண்டு மிகவும் முறையாகவும், மிகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் அமெரிக்க மக்களுக்கு உறுதியளிக்கிறோம்.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அனைத்து மாகாணங்களிலும் பதிவான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதும் அனைத்து வாக்குச்சீட்டுகளும் அப்படியே பாதுகாப்பாக உள்ளன. தேவைப்பட்டால் எந்த மாகாணத்திலும், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்பும், இதே போன்று டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து, அறிக்கையாகவே வெளியிட்டுள்ளது.

வாக்குப்பதிவுகளில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை என்று தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் பொலிஸ் உயர் அதிகாரிகளும், தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!