மாவீரர் நாள் இன்று! – பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு.

வடக்கு, கிழக்கு பகுதி எங்கும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் 6 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, 46 பேருக்கு தடை உத்தரவுகள் வழங்கப்பட்டு, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பொதுவெளியில் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பிரசன்னம் என்றுமில்லாத அளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய முற்படுகின்ற மாவீரர் துயிலும் இல்ல வளாகங்கள் மற்றும் வழமையான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நகர்ப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே இருந்த இராணுவ சோதனைச் சாவடிகளை விட விசேடமாக பொலிஸ் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர், மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கின் ஏனைனய பகுதிகளிலும் இராணுவ, பொலிஸ் பாதுகாப்பும், கெடுபிடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!