வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழேயே, உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்றது என முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண சஹ்ரான் ஹாசிம் தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சரியான தரப்பிற்கு புலனாய்வு செய்திகளை அனுப்பதவறியதன் காரணமாக அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போய்விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சஹ்ரான் ஹாசிமை கண்காணிப்பதற்கு 2004 முதல் இராணுவ புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஹ்ரானை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரி பின்னர் ஐந்து வருடங்களிற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தில் புலனாய்வு அமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டன. அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது,நான் புலனாய்வு பிரிவினை பாதுகாக்க முற்பட்டதால் நானும் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டவனே என முன்னாள் முப்படை பிரதானி தெரிவித்துள்ளார்.
மாவனெல்லயில் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டமை குறித்த விசாரணைகள், வவுணதீவில் பொலிஸாரின் கொலைகள் குறித்த விசாரணைகள் வானத்தவில்லில் வெடிமருந்து மீட்கப்பட்டமை போன்றன சிஐடியினர் சரியான பாதையை பின்பற்றாததன் காரணமாக பிழையாக வழிநடத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தாக்குதல்களை தடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!