கனடா, பிரிட்டன் தூதுவர்களிடம் அதிருப்தி வெளியிட்ட அமைச்சர் தினேஸ்!

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பெருமைப்படுத்தி புகழும் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரிட்டன், கனடா தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த வாரம் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனையும் கனடா தூதுவர் டேவிட் மக்கினனையும் சந்தித்து இருதரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் நாடுகளின் பரஸ்பர பாதுகாப்பு குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்கொலை குண்டு தாரிகள் உட்பட விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை அரசுசாரத செயற்பாட்டாளர்கள் மகிமைப்படுத்தும் வெளிப்படையான அதிகரித்த நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டுள்ளமை குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத பிரச்சார நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தீவிரவாதமயப்படுத்தப்பட்ட புதிய இளைஞர்களும் சிறுவர்களும் உருவாவதற்கு வழிவகுக்கலாம் என்பதை தூதுவர்கள் தீவிர கவனத்தில் எடுத்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தங்கள் நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளையோ அல்லது பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தும் நடவடிக்கைகளையோ ஒரு போதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என பிரிட்டன் கனடா தூதுவர்கள் தெரிவித்தனர் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசசாரத செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை எந்த வகையில் வெளிப்படுத்தவில்லை எனவும் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச போராட்டத்திற்காகவும் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சியை உறுதி செய்யப்போவதில்லை என்ற உறுதிப்பாட்டிற்காகவும் அமைச்சர் தூதுவர்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!