மெக்சிகோவில் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கால் பந்தாட்ட வீரர்!

மெக்சிகோ நாட்டின் குவான்ஜூவாட்டோ மாகாணம் உரியங்ஹடோ நகரில் உள்ள பூங்காவில் பொழுது போக்குக்காக ஏராளமானோர் வருவதுண்டு. அப்போது, இரு தரப்பை சேர்ந்த சில வாலிபர்கள் குழுவாக இணைந்து நட்பு ரீதியில் கால்பந்து விளையாடினர். அப்போது, ஒரு பிரிவினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அந்த நேரத்தில் போட்டியில் பங்கேற்றிருந்த ஒரு வீரர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பினரை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். பொதுமக்களும் ஓட்டம் பிடித்தனர். ஆனால், அந்த வீரர் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தனது நண்பர்களுடன் தப்பி சென்றார். இந்த கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்ற வாலிபரையும் அவரது நண்பர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மெக்சிகோ நாட்டில் போதை பொருட்கள் கடத்தல், உள்நாட்டு வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆயுத குழுக்கள் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது, துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!