வீதியால் சென்றவரை சுடுவோம் என பொலிஸார் அச்சுறுத்தல்; சிவாஜி கண்டனம்!

எந்தவித விசாரணைகளும் இடம்பெறாது என்ற மமதையில் பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் வடக்கில் செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய நேற்று (10) வடமராட்சிப் பகுதியில் இளைஞர் ஒருவரை வீதியில் சுட்டுப் போடுவோம் என ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மிரட்டியுள்ளார் என தெரிவித்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,

வடமராட்சி – உடுப்பிட்டி சந்திக்கு அருகில் தமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை துரத்தி வந்து வீதியில் இடைமறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கியை நீட்டி சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!