படகுகளை தாக்கி மூழ்கடிப்போம்! – வடமராட்சி மீனவர்கள் அதிரடி முடிவு.

வடமராட்சிக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எத்தனை உயிரிழப்பு நிகழ்ந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் வடமராட்சி வடக்கில் உள்ள 13 கடற்றொழிலாளர் சங்கங்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.

இது குறித்த கலந்துரையாடல் நேற்று மதியம் சக்கோட்டையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் வர்ணகுலசிங்கம்-

“அண்மைக் காலமாக இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. எமது மீன்வளம் முழுமையாக அபகரிக்கப்படுகின்றது. எமது மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையை கைவிட்டு கூலிவேலைக்கு செல்ல வேண்டிய அபாய நிலைகூட காணப்படுகின்றது.

குறித்த அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய, இலங்கையின் அனைத்துத் தரப்பினருக்கும் கடிதங்கள் மூலமும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்தோம். இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இழுவைப் படகில் வருபவர்களைத் தாக்குவோம். அதன் போது ஏற்படும் மோதலில் எத்தனை உயிரிழப்புக்கள் நிகழ்ந்தாலும் அஞ்சப் போவதில்லை.

அவ்வாறு ஏற்படப்போகும் இழப்புக்களுக்கு இரண்டு நாட்டு அரசாங்கங்களும் தான் பொறுப்பேற்க வேண்டும். இன்று தொடக்கம் இழுவைப்படகுகளைக் கண்டால் உடனடியாகச் சென்று அடித்து மூழ்கடிப்போம் என்று தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!