ஆயிரம் ரூபா சம்பளத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் : விஜித ஹேரத்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கும் நடவடிக்கையை, அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என அரசாங்கங்கள் உறுதிமொழி வழங்கியிருந்தாலும் இன்னும் அது வழங்கப்படவில்லை. சட்டபூர்வமான பத்திரத்துக்கு பதிலாக மாற்று பத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 750 ரூபா நாட் சம்பளம் வழங்கப்படுகின்றது. அது அடிப்படை சம்பளம் கிடையாது.

தற்போது ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. அந்த தொகைகூட போதாது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஆயிரத்து 281 ரூபா வழங்கப்படவேண்டும்.

2021 ஜனவரி முதல் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழிந்துள்ளது. ஆனால் தோட்டக் கம்பனிகள் இணங்கினாலேயே இந்த சம்பள உயர்வு கிடைக்கும்.

அவ்வாறு இணங்காவிட்டால் கிடைக்காது. கம்பனிகள் இணங்காவிட்டாலும் அந்த தொகையை அரசாங்கம் வழங்குவதற்கு, வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கப்படவில்லை.

கம்பனிகள் சுவீகரிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அதற்கான சட்ட ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை. எது எவ்வாறாயினும் இம்முறை தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!