கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழப்பு: முழு விபரம் உள்ளே!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை இன்று முற்பகல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர், தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர், கடந்த 12 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 84 வயதான ஆண் ஒருவர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த மூவரினதும் உயிரிழப்புக்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 643 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 554 பேர் மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 68 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 21 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 459 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் நேற்று குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 ஆயிரத்து 100 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 709 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 27 ஆயிரத்து 45 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!