யாழ் மாநகர பாதீடு மீண்டும் தோல்வி; முதல்வர் பதவியிழப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 2வது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாதீட்டு திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாநகர முதல்வர் ஆனோல்ட் தனது பதவியை இழந்துள்ளார். இந்நிலையில் புதிய முதல்வர் தெரிவை செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. எனினும் மீண்டும் முதல்வராக ஆனோல்ட் தெரிவு செய்யப்படுவார் என்று அவரது கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ம் ஆண்டிக்கான பாதீட்டு திட்டம், மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்டினால் கடந்த 2ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமர்ப்பணத்தின் போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.

பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு இன்று இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!